உள்ளுணர்வின் மூலம் நடக்கப் போவதை முன்கூட்டியேச் சொல்லும் ESP சக்தி கொண்டவர்கள், பூர்வஜென்ம நினைவுகள் வரப்பெற்றவர்கள் இப்படி சில அதிசய மனிதர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதையெல்லாம் எந்தளவுக்கு நம்புவது என்பதில் குழப்பம் ஏற்படும். இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறது என்று நமது ஆறாவது அறிவு ஒப்புக்கொள்ள மறுக்கும். அதையும் மீறி நம் கண் முன்னே சில அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன.
நேற்று ஒரு அதிசய மனிதரை சன் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதிகம் படிப்பறிவில்லாத இளைஞர் அவர். வயது முப்பதுக்குள் இருக்கலாம். ரயில் நிலையத்தில் கொண்டுபோய் அவரை நிறுத்துகிறார்கள். இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைவில் வரும் ரயிலின் கடைசிப் பெட்டியின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் எண்ணை மிகச் சரியாக சொல்கிறார். அங்கேயிருந்து அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். இப்பொழுது இருப்பது நகரின் நெரிசல் மிகுந்த சாலை. அவரை ஒரு வேனில் அமர்த்தியிருக்கிறார்கள். அதிலிருந்தபடியே அருகில் பயணம் செய்யும் பஸ்ஸின் மறுபக்கத்திலுள்ள எழுத்துக்களையெல்லாம் படிக்கிறார். பார்க்காமலே பதிவு எண்களைச் சொல்கிறார். இதேபோல் தன்னால் வானில் பறக்கும் விமானத்தின் எண்களைக்கூட சொல்ல முடியும் என்கிறார். இதையெல்லாம் அவருடனே இருந்து கண்காணிக்கும் ஒரு மருத்துவரும், மனோதத்துவ நிபுணரும் அவரை பரிசோதித்து விட்டு இதை 'மிராக்கிள்' என்கின்றனர். ஏதோ ஒருவகை உள்ளுணர்வு என்கிறார்கள். அதற்குமேல் அவர்களிடமும் விளக்கமில்லை.
இதையெல்லாம் பார்க்கும்பொழுது நமது நம்பிக்கைவெளிக்கும் அப்பாற்பட்ட, அதிகம் விளங்கிக்கொள்ள முடியாத சில அதிசய சம்பவங்களைப்பற்றிக் கேள்விப்படும்பொழுது அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்கிற மேலதிக வினாக்களுக்குத்தான் விளக்கம் கிடைப்பதில்லை.